General04 July 2026

இதயங்களை நெகிழ வைத்த பாசச்சிறுமி ஸ்வேதா

ஒரு சிறுமி முள்ளம் பன்றி மற்றும் ஒரு பூனையுடன் நெல் வயல் வழியாக நடந்து செல்லும் அழகிய காணொளி காட்சி வைரலாகி மில்லியன் கணக்கான இதயங்களைக் ஈா்த்துள்ளது. பங்களாதேஷில் இந்த காணொளி பதிவு செய்யப்பட்டது என கூறப்பட்டாலும் உண்மையில் அது இலங்கையில் பதிவு செய்யப்பட்டது.

பொலன்னறுவையைச் சேர்ந்தவா் ஏழு வயது ஸ்வேதா புன்சந்தி .

ஸ்வேதாவுக்கு எப்போதும் விலங்குகள் மீது மிகுந்த பாசம் உண்டு என அவரது குடும்பத்தினரின் குறிப்பிடுகின்றனா்.

அவரது தாய் கூறுகையில், தங்கள் குடும்பம் சாதாரண எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தாலும், அவர்கள் இயற்கையோடு ஒன்றித்து வாழ்வதால் ஸ்வேதாவால் வனவிலங்குகளுடன் நெருங்கி பழக முடிகிறது. விலங்குகளோடு எப்படி நெருங்கி பழகுவது என்பது அவருக்கு நன்றாக தொியும் எனவும் அவரது தாயார் குறிப்பிட்டார்.

தனது வீட்டருகே காயமடைந்த நிலையில் காணப்பட்ட முள்ளம்பன்றியைக் கண்டறிந்த பின்னா், அதனுடனான நட்பு தொடங்கியுள்ளது.

நாய்கள் குரைக்கும் சத்தத்தைக் கேட்ட பிறகு, ஒளிந்திருந்த முள்ளம்பன்றியை தனது மகள் கண்டு பிடித்ததாக அவரது தாய் நினைவு படுத்தினார். அந்த விலங்கின் காலில் காயம் ஏற்பட்டிருந்த நிலையில் அது குணமடையும் வரை, அந்தக் குடும்பத்தினர் முள்ளம்பன்றியை வீட்டில் வைத்து சிகிச்சை அளித்தனர்.

காயம் குணமடைந்த பிறகு, அந்த முள்ளம்பன்றி காட்டுக்குத் திரும்பியுள்ளது, ஆனால் தொடர்ந்து அந்தக் குடும்பத்தினரை முள்ளம் பன்றி சந்தித்து வந்துள்ளது. அது படிப்படியாக ஸ்வேதாவுடன் பழகிவிட்டது. வைரலாகியுள்ள காணொளியில் காணப்படும் நெருங்கிய பிணைப்பை ஸ்வேதா அதனுடன் வளர்த்துக் கொண்டார். அந்தக் குடும்பத்தினர் முள்ளம்பன்றியைப் பிடித்து வைத்திருக்கவில்லை. அது காட்டில் சுதந்திரமாகத் திரியவும், தானாகவே திரும்பி வரவும் அனுமதிக்கின்றனர்.

ஸ்வேதாவுக்கும் அந்த முள்ளம்பன்றி மற்றும் அந்தக் குடும்பத்தின் பூனை ஆகியவற்றுக்கு இடையேயான இந்த நெகிழ்ச்சியான நட்பை உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானோர் பார்த்துள்ளதோடு இதை ஒரு நிஜ வாழ்க்கையில் நெகிழ்வான அழகிய தருணம் என கூறி பலரும் பரவசமடைகின்றனா்.
Related recommendation
Hiru TV News | Programmes