General07 July 2026

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: 27 பேரின் உடலங்களையும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் உயிரிழந்த 7 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 20 கைதிகள் உட்பட 27 பேரின் உடலங்களையும் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீர்கொழும்பு தலைமை நீதவான் ஷிலானி பெரேரா இன்று (07) உத்தரவிட்டுள்ளார்.

நீர்கொழும்பு பொது மருத்துவமனையின் விசேட சட்ட மருத்துவ அதிகாரி டபிள்யூ.எஸ்.ஆர். விக்ரமரத்னவுக்கு நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து நீர்கொழும்பு தலைமையக தலைமை காவல்துறை பரிசோதகர் திலின தம்சித் ஹெட்டியாரச்சி மற்றும் நீதிமன்ற காவல்துறை அதிகாரி சாஜன் பண்டார ஆகியோர் நீதிமன்றில் விபரங்களை முன்வைத்த போதே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

உயிரிழந்தவர்களின் குடும்பப் பாதுகாவலர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னரும், பிரேதப் பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னரும் உடலங்களை அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீர்கொழும்பு தலைமையக தலைமை காவல்துறை பரிசோதகர் திலின தம்சித் ஹெட்டியாரச்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், இந்த வன்முறைச் சம்பவம் குறித்து முழுமையான மற்றும் விரிவான அறிக்கை ஒன்றினை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் காவல்துறைக்கு நீதவான் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, உடலங்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான் வழக்கினை ஒத்திவைத்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes