General08 July 2026

பஹ்ரைன், குவைத்தில் உள்ள அமெரிக்காவின் 85 இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்!

ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்கா ஈரானின் இலக்குகள் மீது நேற்று (07) பலமான வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்தது.

இதற்குப் பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்காவின் 85 இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் புரட்சிப் படை இன்று (08) அறிவித்துள்ளது.

வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதல்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல் என அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் குற்றம் சாட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், கட்டளை மையங்கள்மற்றும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் இருந்த ஈரானின் 60-க்கும் மேற்பட்ட சிறிய ரகப் படகுகள் உட்பட 80-க்கும் அதிகமான இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

மேலும், ஈரானுக்கான எண்ணெய் ஏற்றுமதி உரிமத்தையும் அமெரிக்கா ரத்து செய்துள்ளது.

அமெரிக்காவின் இந்தத் தாக்குதலை "வெளிப்படையான ஆக்கிரமிப்பு" என்று கண்டித்துள்ள ஈரான், பஹ்ரைனின் ஐந்தாவது கடற்படை தலைமையகம் மற்றும் குவைத்தின் அலி அல் சேலம் வானூர்திபடை தளம் உள்ளிட்ட 85 முக்கிய அமெரிக்க இராணுவ இலக்குகள் மீது ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்திகளை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்தத் தாக்குதலின் போது கண்காணிப்பில் ஈடுபட்ட அமெரிக்காவின் MQ-9 ஆளில்லா வானூர்தி ஒன்றையும் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் வான்வழி எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கவிடப்பட்டன.

பாதுகாப்பு கருதி பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குவைத் இராணுவம் தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் ஊடாக இந்தத் தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes