General15 July 2026

முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதி சார்பில் சார்பில் முன்னிலையான இரு சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, வழக்கின் மேலதிக விசாரணைகளை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 07ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல உத்தரவிட்டார்.

கடந்த 2014ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராக கடமையாற்றிய காலத்தில், அந்த நிறுவனத்தின் களஞ்சியசாலை வளாகத்தில் கார்பட் இடும் பணிகளை ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதில், அந்த நிறுவனத்திற்குச் சாதகமான முறையில் செயற்பட்டு ஊழல் புரிந்ததாக முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடி மீது கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Related recommendation
Hiru TV News | Programmes