General23 July 2026

பணியில் இணைந்து சில நாட்களே ஆன நிலையில் கனவுகளுடன் எரிந்துபோன இளம் மொட்டுகள்!

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று முன்தினம் (21) முற்பகல் திடீர் தீ விபத்தில் ஐவர் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடலங்கள் மீதான மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் முழுமையாக அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளதால், அவை ஹோமாகம ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டு இவ்வாறு மரபணு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு ஐந்து நாட்கள் வரை செல்லலாம் என மருத்துவமனை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த, மரியோ எட்வர்ட் என்ற, சுமார் 15 வருடங்களாக குறித்த தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்த ஒருவரும் அடங்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஏனைய நால்வரும் அங்கு, பணிக்கு சேர்ந்து சொற்ப காலங்களே ஆகின்றன என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் தெனியாயவைச் சேர்ந்த 19 வயதுடைய சஹன் உதார என்பவரும் உயிரிழந்த நிலையில் அவர் ஆறு மாதங்களுக்கு முன்பே அங்கு பணிக்கு சேர்ந்துள்ளதுடன் இந்த சம்பவத்தில் உயிரிழந்த அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த கமகே திலீப் மதுசங்க (வயது 19) என்பவர் 4 நாட்களுக்கு முன்பே பணியில் இணைந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ஹட்டன் - மஸ்கெலியாவைச் சேர்ந்த 26 வயதுடைய வரதராஜ் தமயந்தி என்ற யுவதியும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவருக்கு குறித்த தொழிற்சாலையில், 6 மாதங்களுக்கு முன்பே பணியில் இணைந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த மற்றையவர் அட்டகலம்பன்ன பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சச்சின் தில்ஷான் என்பவரென கண்டறியப்பட்டுள்ளது.

இவர் ருமேனியா நாட்டுக்கு தொழிலுக்காக செல்வதற்கு விசா கிடைக்கும் வரை தற்காலிகமாக அங்கு பணிபுரிந்து வந்தவர் என தெரியவந்துள்ளது.

வேலைவாய்ப்பு பணியகத்தில் இரண்டு நாட்கள் பயிற்சியை நிறைவுசெய்துள்ள இவர், பணியில் இணைந்து இரண்டு வாரங்களேயாவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, இந்த தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் நடவடிக்கையின்போது, மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் அங்குள்ள பல குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக, தொழிற்சாலையில் முறையான தீயணைப்பு பாதுகாப்பு அமைப்பு இன்மையை பிரதானமாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அத்துடன், 20 நாட்களுக்குள் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகள், கடந்த மாதம் 2 ஆம் திகதியன்று எழுத்துமூலம் குறித்த தொழிற்சாலையில் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியிருந்தனர்.

அந்த அவகாசம் முடிவடைவதற்கு ஒரு நாள் மாத்திரம் மீதமுள்ள நிலையில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதேவேளை, தீ வேகமாகப் பரவியதால், தீயணைப்புப் படையினர் பெரும் சிரமத்துக்கு மத்தியிலேயே தீப்பரவலை கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. மின்சாரக் கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே, அந்த பகுதியில் அவசரகால பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தீயணைப்பு வாகனங்களின் வருகை தாமதமானமை குறித்து தொழிற்சாலைகளின் பாதுகாப்பு மற்றும் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் பிரதேசவாசிகள் விசனம் வெளிப்படுத்தியுள்ளனர்.

தொழிற்சாலைகளில் இவ்வாறான பாரிய அனர்த்தங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான முறையான பொறிமுறைகளோ அல்லது அவசரகால பாதுகாப்பு ஏற்பாடுகளோ அங்கு பலவீனமாகவே காணப்படுவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறிப்பாக, அவசர தேவைகளின்போது தீயணைப்பு வாகனங்கள் குறித்த நேரத்தில் சம்பவ இடத்துக்கு வருகை தராமை குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு நீண்ட நேரம் (சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை) தாமதமானமையே இந்த அளவுக்கு பாரியதொரு பேரழிவு ஏற்படுவதற்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொழிற்சாலைகளில் 80 முதல் 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் போதிலும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான போதிய பாதுகாப்பு வழிமுறைகளும் அவசரகாலத் திட்டங்களும் அங்கு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்

கைத்தொழில் வலயங்களில் அமைக்கப்படும் இவ்வாறான தொழிற்சாலைகள் உற்பத்திச் செலவைக் குறைப்பதில் மாத்திரம் கவனம் செலுத்துவதாகவும், தொழிலாளர்களின் அடிப்படை மனித உயிரின் பாதுகாப்புக்கும் வாழ்வுரிமைக்கும் எந்தவித உத்தரவாதமும் வழங்குவதில்லை எனவும் அந்த பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த விபத்து முதல் தடவையாக நிகழ்ந்த ஒன்று அல்லவென்றும், இதற்கு முன்னரும் இந்த பகுதிகளில் அருகில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், அவசரகால சூழ்நிலைகளில் உடனடியாகத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய முறையான உடனடிப் பொறிமுறைகள் எவையும் அருகில் இல்லை எனவும் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes