General23 July 2026

நச்சு மதுப்பழக்கம் மூளையின் இயற்கையான ஊக்கமளிக்கும் அமைப்பைச் சிதைக்கும் - மருத்துவர் எச்சரிக்கை!

நச்சு மதுப்பழக்கத்துக்கு அடிமையாதல், மூளையில் டோபமைன் (Dopamine) எனப்படும் இரசாயனத்தின் அதிகப்படியான வெளிப்பாட்டைத் தூண்டுவதன் மூலம் அதன் இயற்கையான தூண்டுதல் அமைப்பைச் சீர்குலைக்கக் கூடும் என உளவள ஆலோசகரும் உளவியல் நிபுணருமான மருத்துவர் சமிந்த வீரசிறிவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்த அவர், இந்த நிலைமை காரணமாக மூளையின் செயற்பாடுகளில் நீண்டகால மாற்றங்கள் ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திருப்தி, ஊக்கம் மற்றும் மகிழ்ச்சி போன்ற உணர்வுகளுக்குப் பொறுப்பான மூளையில் உள்ள ஒரு இரசாயனமே டோபமைன் ஆகும் என்று அவர் விளக்கியுள்ளார்.

உணவு உட்கொள்ளுதல், சமூகமயமாதல், தனிப்பட்ட இலக்குகளை அடைதல், உடற்பயிற்சி செய்தல் அல்லது தியானம் செய்தல் போன்ற நல்வாழ்வு மற்றும் உயிர்வாழ்வுடன் தொடர்புடைய செயற்பாடுகளின்போது இது இயற்கையாகவே கட்டுப்படுத்தப்பட்ட அளவுகளில் வெளியிடப்படுகிறது.

மூளையில் டோபமைன் இயல்பாகவே சமநிலையான தாளத்தைக் கொண்டுள்ளதாகவும், இது அன்றாடச் செயற்பாடுகளிலிருந்து மக்கள் திருப்தியை அனுபவிக்க உதவுகிறது என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், நச்சு கலந்த மதுப்பழக்கமானது வழக்கத்துக்கு மாறாக அதிக அளவிலான டோபமைன் வெளியிடப்படுவதற்குக் காரணமாவதுடன், அது மூளைச் செல்களைத் திணறடிக்கிறது.

"மூளை மீண்டும் மீண்டும் அதிகப்படியான டோபமைனுக்கு வெளிப்படுத்தப்படும்போது, ஏற்பி நலிவுறுத்தல் (receptor downregulation) என அறியப்படும் ஒரு செயல்முறை மூலம் செல்கள் டோபமைன் ஏற்பிகளின் எண்ணிக்கையையோ அல்லது உணர்திறனையோ குறைக்கத் தொடங்குகின்றன" என்று அவர் விளக்கினார்.

இதன் விளைவாக, நச்சு கலந்த மதுவுக்கு அடிமையானவர்கள் சாதாரண தினசரிச் செயற்பாடுகளிலிருந்து திருப்தியை அனுபவிக்கும் திறனைத் படிப்படியாக இழக்கக்கூடும் என்று அவர் தெரிவித்தார். இந்த நிலை அவர்களை அதே இன்ப உணர்வைப் பெறுவதற்காக வலுவான தூண்டுதல்களைத் தேடத் தூண்டுவதுடன், அது போதைக்கு அடிமையாகும் ஒரு தொடர் வட்டத்தை உருவாக்குகிறது என்றும் அவர் கூறினார்.

மூளையின் ஊக்கமளிக்கும் அமைப்பில் ஏற்படும் இந்தச் சீர்குலைவு மீட்சி செயற்பாட்டை மிகவும் சவாலானதாக மாற்றுவதாகவும், மதுப்பழக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு ஆரம்பகால தலையீடு மற்றும் ஆதரவின் முக்கியத்துவத்தை இது சுட்டிக்காட்டுவதாகவும் மருத்துவர் சமிந்த வீரசிறிவர்தன எச்சரித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes