General23 July 2026

சுற்றுலாத்துறையில் பின்தங்கியுள்ள முல்லைத்தீவு, மன்னார்: நாடாளுமன்றில் விசேட தலையீட்டை வலியுறுத்தினார் ரவிகரன்!

இலங்கையில் சுற்றுலாத்துறையில் மிகவும் பின்தங்கியுள்ள முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களின் நிலைபேறான அபிவிருத்திக்குச் சுற்றுலா அமைச்சு விசேட தலையீட்டை மேற்கொள்ள வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

இன்று (23) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

2025 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, நாட்டின் 25 மாவட்டங்களில் மிகக் குறைந்த சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் மாவட்டமாக முல்லைத்தீவு பதிவாகியுள்ளது.

கடைசி 4 இடங்களில் வடமாகாணத்தின் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களும் உள்ளன.

தங்குமிட வசதிகள் கொண்ட மாவட்டங்களின் தரவரிசையிலும் முல்லைத்தீவு 25ஆவது இடத்தில் உள்ளது.

2025 இல் வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்த்து ஏனைய 4 மாவட்டங்களிலும் சுற்றுலா தொடர்பான எந்தவொரு புதிய முதலீட்டு திட்டமும் உள்வாங்கப்படவில்லை.

ஒரு மாவட்டம் சமத்துவ அடிப்படையில் 4% பங்களிப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிலையில், கொழும்பு மற்றும் காலி தலா 20% பங்களிப்பையும், முல்லைத்தீவு மற்றும் மன்னார் தலா 0.08% மட்டுமே கொண்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டிய விடயங்களை ஏற்றுக்கொண்ட சுற்றுலா பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க பதிலளிக்கையில்:

வவுனியா பல்கலைக்கழகத்தின் பங்களிப்புடன் 2026 மற்றும் 2027ஆம் ஆண்டுகளுக்கான சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இனங்காணப்பட்டுள்ள 76 சுற்றுலா மையங்களில், முதற்கட்டமாக 10 மையங்கள் தெரிவு செய்யப்பட்டு உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் பயணிகளைக் கவரும் வகையில் அபிவிருத்தி செய்யப்படும்.

உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் நிதியுதவியுடன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அனைத்து அமைச்சுக்களுடனும் இணைந்து பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes