General25 July 2026

மஹாபொல நிதியத்தின் முக்கிய அறிவிப்பு

2024-2025 ஆம் ஆண்டுக்கான மஹாபொல கல்வி உதவித்தொகை பெறுபவர்களின் இறுதித் தெரிவுப் பட்டியல் அந்தந்தப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லலித் அதுலத்முதலி மஹாபொல உயர்கல்வி உதவித்தொகை நிதியம் இதனை அறிவித்துள்ளது.

இந்தநிலையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் 2026 ஆகஸ்ட் 17க்குள் தங்களது இணையவழிப் பதிவை நிறைவு செய்யுமாறு நிதியம் கேட்டுக்கொண்டுள்ளது.

இறுதித் தெரிவுப்பட்டியலில் பெயர்கள் இடம்பெற்றுள்ள மாணவர்கள், தங்களது தேசிய அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி, இறுதி திகதிக்கு முன்னதாக மஹாபொல இணையதளத்தில் (https://mahapola.lk/BankApp2025/) பதிவு செய்ய வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளனர்.

இணையவழிப் பதிவை நிறைவு செய்த பிறகு, மாணவர்கள் விண்ணப்பத்தை அச்சிட்டு, கையொப்பமிட்டு, தங்களது வங்கிக் கணக்குப் புத்தகத்தின் நகல் அல்லது வங்கிக் கணக்கு உறுதிப்படுத்தல் சான்றிதழுடன் அந்தந்தப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்வி உதவித்தொகை கொடுப்பனவுகள், விண்ணப்பதாரரின் பெயரில் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றில் பராமரிக்கப்படும் தனிநபர் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கில் மட்டுமே வரவு வைக்கப்படும் என்று மஹாபொல நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், 2024-2025 மஹாபொல கல்வி உதவித்தொகைக்குத் தேர்ந்தெடுக்கப்படாததை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விரும்பும் மாணவர்கள், தத்தமது பல்கலைக்கழகங்கள் மூலம் தங்கள் மேன்முறையீடுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்கள் அத்தகைய மேன் முறையீடுகளை 2026 ஒக்டோபர் 15, அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes