International25 July 2026

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பியது சீனா!

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய 2 செயற்கைக்கோள்கள் உட்பட மொத்தம் 5 செயற்கைக்கோள்களை, ‘லிஜியான்-1 வை15’ (Lijian-1 Y15) கேரியர் ரொக்கெட் (Rocket) மூலம் சீனா வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள தோங்பெங் வர்த்தக விண்வெளி மையத்திலிருந்து நேற்று இந்த ரொக்கெட்டுக்கள் செலுத்தப்பட்டுள்ள அதேவேளை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை விண்வெளி ஆராய்ச்சிக்கு விரிவாக்கும் நோக்கிலேயே இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இதில் 'ஜிதியான் ஸ்டார் ஏ-04' (Jitian Star A-04) என்ற செயற்கைக்கோள், தன்னியக்க AI மாதிரிகள் மூலம் விண்வெளியில் தன் செயல்பாடுகளைத் தானே நிர்வகிக்கும் திறன் கொண்டதாகும்.

அதேபோல் 'செங்குவாங்-2 03' (Xiguang-2 03) என்ற செயற்கைக்கோளில் 3 AI வானிலை மாதிரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இது திடீர் சூறாவளி மற்றும் பலத்த மழை போன்ற வானிலை மாற்றங்களை உடனுக்குடன் துல்லியமாகக் கணிக்க உதவும்.

வழக்கமான வானிலை செயற்கைக்கோள்கள் தரவுகளைப் பூமிக்கு அனுப்ப 90 நிமிடங்கள் வரை எடுக்கும் நிலையில், இந்த AI செயற்கைக்கோள்கள் விண்வெளியிலேயே தரவுகளை உடனடியாகப் பகுப்பாய்வு செய்யும்.

இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் ‘திரீ-பாடி கம்ப்யூட்டிங் கான்ஸ்டலேஷன்’ (Three-Body Computing Constellation) திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இத்திட்டத்தின் கீழ் 2027ஆம் ஆண்டிற்குள் 100 AI செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலைநிறுத்த சீனா திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes