General26 July 2026

இந்த ஆண்டு 250,000 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு

இந்த ஆண்டில் 250,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டமிட்டுள்ளது.

அரசாங்கம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிலையங்கள் ஊடாக இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கையில் சற்று வீழ்ச்சி கண்டாலும், பாதுகாப்பான நாடுகளுக்கு உயர் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புகளுக்குத் தொழிலாளர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி, கடந்த ஆண்டில் 143,087 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.

அவர்களில் 92,590 பேர் ஆண் தொழிலாளர்கள் ஆவர்.

இந்தக் காலகட்டத்தில் 50,497 பெண் தொழிலாளர்களும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிடுகின்றது.

தற்போது இஸ்ரேலுக்கு 14,000 தொழிலாளர்களை அனுப்ப வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் திட்டமிட்டுள்ளது.

மேலும், இதுவரை அவர்களில் 7,873 பேர் இஸ்ரேலிய வேலைகளுக்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 8,000 தொழிலாளர்களைத் தென் கொரியாவிற்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அவர்களில் 4,794 பேர் ஏற்கனவே புறப்பட்டுச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கின்றது.

பணியகத்தின் தரவு அறிக்கைகளின்படி, கடந்த ஆண்டில் 73,623 தொழிலாளர்கள் திறன் சார்ந்த பணிகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதுடன் 69,494 தொழிலாளர்கள் திறன் சாராத பணிகளுக்காகச் சென்றுள்ளனர்.

இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான 6 மாத காலப்பகுதியில், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes