General28 July 2026

பெருந்தோட்ட மக்களின் காணி உரிமைக்காகச் செயற்படுவோம்: சஜித் பிரேமதாச உறுதி!

பெருந்தோட்ட மக்களின் காணி உரிமை மற்றும் அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காகப் புதிய கொள்கை ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பலாங்கொடை பகுதியில் நடைபெற்ற ஐக்கிய தோட்ட சேவையாளர் சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு வாக்குறுதிகள் தேர்தல் காலங்களில் மாத்திரம் வழங்கப்படுகின்றன என்றார்.

நாட்டின் தேயிலை பயிரிடப்படும் காணிகளில் 60 சதவீதமானவை பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமாகவுள்ளன.

எனினும், 40 சதவீதமான பயிர்க் காணிகளைக் கொண்டுள்ள சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களே நாட்டின் தேசிய தேயிலை உற்பத்தியில் 70 சதவீத பங்களிப்பை வழங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரச மற்றும் தனியார் தோட்டக் காணிகள் மற்றும் தேயிலை பயிரிடப்படாத காணிகளை ஒன்றிணைத்து, தோட்ட மக்களைச் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றி, தமது சொந்த நிலத்திலேயே வீடமைத்துக்கொண்டு, அதில் பயிரிடும் ஒரு தேயிலைத் தொழில்முனைவோராக அவர்களை உருவாக்குவதற்கான புதிய கொள்கையை, ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றின் கீழ் நடைமுறைப்படுத்தத் தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளை வழங்குவதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்று தமது ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்படும் எனவும் அவர் இதன்போது உறுதியளித்தார்
Related recommendation
Hiru TV News | Programmes