General01 August 2026

நாட்டில் நிலவும் வறட்சி: நீரைக் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெப்பமான மற்றும் வறட்சியான வானிலை நீடித்து வருவதால், பொதுமக்களை நீரைக் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கோரியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய நீரியல் மற்றும் பேரிடர் முகாமைத்துவ பணிப்பாளர் எல்.எஸ்.சூரியபண்டார, நாட்டின் பல மாவட்டங்களில் ஏற்கனவே கடுமையான நீர் பற்றாக்குறை பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார்.

நாட்டின் பிரதான 73 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவில் தற்போது சுமார் 40வீத நீர் மட்டுமே எஞ்சியுள்ளது.

எதிர்வரும் எல் நினோ காலநிலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் ஆவியாகும் வீதம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், மழைபெய்யும் வரை நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏனைய ஆதாரங்களில் உள்ள நீரை வீணாக்காமல் மிகவும் கவனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களை நீரியல் மற்றும் பேரிடர் முகாமைத்துவ பணிப்பாளர் எல்.எஸ்.சூரியபண்டார வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில்,வளிமண்டலவியல் திணைக்களத்துடன் இணைந்து எல் நினோ நிலையை எதிர்கொள்ள ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாக நீர் முகாமைத்துவ செயலகத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் நிலந்த தனபால தெரிவித்துள்ளார்.

எல் நினோ என்பது மழை முற்றிலும் பெய்யாது என்பதைக் குறிக்காது. மாறாக மழை வீழ்ச்சி முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

அத்துடன், வெப்பநிலை உயர்வால் ஆவியாதல் வீதம் அதிகரிக்கும் என்பதால் நீர் முகாமைத்துவம் மிக முக்கியமானது என்று அவர் குறிப்;பிட்டுள்ளார்.

இதேவேளை பெரும்போகப் பயிர்ச்செய்கையை எதிர்வரும் அக்டோபர் 1 முதல் 15 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாசன அமைப்புகள் மற்றும் விவசாய மண்டலங்கள் முழுவதும் ஒரே நேரத்தில் பயிர்ச்செய்கையைத் தொடங்குவது கணிசமான அளவு நீரைச் சேமிக்க உதவும் என்ற நோக்கத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், வறட்சியான வானிலையைச் சமாளிக்கக் குடிநீர் மற்றும் மின்சார விரையத்தைக் குறைக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes