General02 August 2026

பாகிஸ்தானை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இலங்கை மகளிர் அணி!

தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில், இலங்கை மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதன் மூலம் இலங்கை மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரை 2-0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களைக் குவித்தது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் சார்பில் ஷவால் சுல்ஃபிகார் 48 ஓட்டங்களையும், முனீபா அலி 45 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் சமுதி பிரபோதா 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தநிலையில் 176 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 14 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அணித்தலைவி சமரி அத்தபத்து 15 பந்துகளில் 40 ஓட்டங்களை விளாசி வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்.

அறிமுக வீராங்கனை சஞ்சனா கவிந்தி 46 ஓட்டங்களையும், ஹர்ஷிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும் பெற்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இரு அணிகளுக்கும் இடையிலான தொடரின் மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தம்புள்ளையில் நடைபெறவுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes