General03 August 2026

போவதென்ன நீர்த்தேக்கத்தின் நீரை முழுமையாக வெளியேற்ற நடவடிக்கை

போவதென்ன நீர்த்தேக்கத்தின் நீரை முழுமையாக வெளியேற்றும் பணி வரும் 17ஆம் திகதி தொடங்கப்பட உள்ளதாக நீர்த்தேக்கப் பொறுப்புப் பொறியாளர் புத்திக நவரத்ன தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள நீர்த்தேக்கங்களில் இருந்து வண்டல் மண்ணை அகற்றும் தேசியத் திட்டத்தின் முன்னோடித் திட்டமாக (Pilot Project) இது மேற்கொள்ளப்படுவதாக நீர்த்தேக்கப் பொறியாளர் குறிப்பிட்டுள்ளார்.

போவதென்ன நீர்த்தேக்கம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதன் பதிவு செய்யப்பட்ட நீர் கொள்ளளவு 56 மில்லியன் கன மீற்றர் என்றாலும், 2014ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் அதன் கொள்ளளவு 23 மில்லியன் கன மீற்றராகக் குறைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கலாவெல படுகைக்கு நீர் வழங்கும் சுரங்கப்பாதையின் அணுகு கால்வாயில் சுமார் 4 மீற்றர் வரை வண்டல் மண் படிந்து மூடியுள்ளதால், நீர்த்தேக்கத்தில் உள்ள நீரை வெளியேற்றி, அந்த கால்வாயை 100 மீற்றர் தூரத்திற்குச் சுத்தம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்போது சுமார் 10,000 கன மீற்றர் வண்டல் மண்ணை அகற்ற எதிர்பார்க்கப்படுகிறது.

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீர்த்தேக்கத்தில் சேமித்து வைக்கக்கூடிய நீரின் அளவை மீண்டும் கணக்கிடுதல், நீர்மின் உற்பத்தி வழித்தடத்தில் உள்ள வண்டல் மண்ணை அகற்றுதல் மற்றும் அகற்றிப் பயன்படுத்தக்கூடிய மணலின் அளவைக் கண்டறிதல் ஆகிய பணிகளும் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளன.

இருப்பினும், இந்தச் செயற்பாட்டின் காரணமாக விவசாய நிலங்களுக்கு நீர் விநியோகிப்பதில் எந்தவிதத் தடங்கலும் ஏற்படாது என்றும் பொறியாளர் வலியுறுத்தியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes