General07 August 2026

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கப் பிரேரணை!

உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையில் மாற்றங்களை முன்மொழிந்து, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் உத்தரவுக்கமைய இன்று (07) வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 67 ஆக உயர்த்தப்படவுள்ளதுடன், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 ஆக நிர்ணயிக்கப்படவுள்ளது.

அத்துடன், பிரதம நீதியரசர் தனது 67ஆவது வயதை அடையும் போது அல்லது 6 ஆண்டுகள் பதவிக் காலத்தை நிறைவு செய்யும் போது (எது முந்துகிறதோ அதற்கேற்ப) ஓய்வுபெறுவார் என்றும் இந்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் அதிகபட்ச எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆக உயர்த்தவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Related recommendation
Hiru TV News | Programmes