General12 August 2026

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம்: ஜனாதிபதியுடன் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று சந்திப்பு!

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது வரம்பை நீடிப்பதற்கான அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளது.

இதன்படி, இன்று பிற்பகல் ஒரு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது வரம்பை நீடிப்பது தொடர்பான 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கடந்த 7 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.

இதனிடையே, நீதிபதிகளின் ஓய்வு வயது வரம்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மகாநாயக்க தேரர்களால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் பரிசீலித்த பின்னர், ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய அரசாங்கம் என்ற வகையில் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

அதன்படி, தானும் நீதியமைச்சரும் மகாநாயக்க தேரர்களை சந்தித்து இது தொடர்பான விடயங்களை விளக்கியதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes