International12 August 2026

மத்திய தரைக்கடலில் வேகமாகப் பரவும் அந்நிய கடல்வாழ் உயிரினங்கள்: மாறிவரும் கடல் சூழலால் விஞ்ஞானிகள் கவலை

மத்திய தரைக்கடல் பகுதியில் அந்நிய கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

கடல் வெப்பநிலை அதிகரித்து வருவதும், சூயஸ் கால்வாய் வழியாக வெப்பமண்டலப் பகுதிகளைச் சேர்ந்த உயிரினங்கள் மத்திய தரைக்கடலுக்குள் நுழைவதும் இதற்கான முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்படுகின்றன.

சமீபத்திய ஆய்வின்படி, மத்திய தரைக்கடல் பகுதியில் சராசரியாக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை புதிய அந்நிய உயிரினம் ஒன்று பதிவாகி வருகிறது. தற்போது இப்பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட அந்நிய உயிரினங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சிங்கமீன் (Lionfish), முயல்மீன் மற்றும் சில பஃபர் மீன் இனங்கள் உள்ளூர் கடல்வாழ் உயிரினங்களுடன் போட்டியிடுவதுடன், உணவுச் சங்கிலியிலும் மீன்பிடித் தொழிலிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சைப்ரஸில் சிங்கமீன்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிறப்புப் பொறிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, இவ்வகை மீன்களைப் பாதுகாப்பான முறையில் உணவாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட மாற்று வழிமுறைகளையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

கடல் வெப்பநிலை அதிகரிப்பு உள்ளிட்ட காலநிலை மாற்றத்தின் தாக்கங்களும் இந்த மாற்றங்களுக்கு காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மத்திய தரைக்கடல் கடல் சூழலைப் பாதுகாப்பதற்கு நீண்டகால கண்காணிப்பு மற்றும் உரிய நடவடிக்கைகள் அவசியம் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes