General14 August 2026

நீதித்துறையின் சுதந்திரத்தில் அரசாங்கம் எவ்வித ஆபத்தையும் எடுக்கக்கூடாது : ரஜீவ் அமரசூரிய சுட்டிக்காட்டு!

நீதித்துறையின் சுதந்திரம் போன்ற உணர்வுபூர்வமான மற்றும் உயர்ந்த விடயங்களில் அரசாங்கம் எவ்வித ஆபத்தினையும் எடுக்கக்கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்திற்கு சென்று கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சட்டத்துறையின் நிலைப்பாடு தெளிவாக முன்வைக்கப்பட்டது.

அத்துடன், உத்தேசிக்கப்பட்ட புதிய அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சட்டத்தரணிகள் சமூகம் முழுமையாக எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், "நீதித்துறையின் சுதந்திரம் என்பது ஒரு உன்னதமான கருத்தாக்கமாகும். இதில் ஏதேனும் ஆபத்து இருப்பதாக ஜனாதிபதி கருதினால், அதற்கான ஒரே தீர்வு இதனைச் செய்யாமல் இருப்பதே ஆகும்.

நாட்டின் அபிவிருத்தி, அமைச்சுப் பதவிகளை வழங்குவது போன்ற விடயங்களில் அரசாங்கம் ஆபத்துக்களை எடுக்க முடிந்தாலும், நீதித்துறையின் சுதந்திரத்திற்கு அடிபணியச் செய்யும் அல்லது ஆபத்தை விளைவிக்கும் எதனையும் ஒருபோதும் செய்யக்கூடாது. ஏனெனில் இது ஒட்டுமொத்த மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் எதிர்காலத்தைப் பாதிக்கும் தேசியப் பிரச்சினை என அவர் வலியுறுத்தினார்.

உத்தேசிக்கப்பட்ட திருத்தம் தொடர்பில் சட்டத்தரணி சங்கம், நீதிபதிகள் சங்கங்கள், மகாநாயக்க தேரர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அவதானிகள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் கூட எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

இதன்படி, தற்போது இதற்கு ஆதரவளிப்பது அரசாங்கம் மட்டுமே எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக, அவசரப்படாமல் பரந்து பட்ட அறிஞர்களின் கலந்துரையாடலுக்குப் பின்னர் நாட்டிற்கும் மக்களுக்கும் நலன் பயக்கும் நியாயமானதொரு முடிவுக்கு வருமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய வலியுறுத்தினார்.
Related recommendation
Hiru TV News | Programmes