General18 August 2026

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவரான மஹீல் சேனாரத்னவைத் தலா 25 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம இன்று (18) அனுமதியளித்தார்.

அத்துடன், சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் மூலம் 2010 - 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மீன் விற்பனை நிலையங்களை அமைத்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளின் போது, உரிய கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றாமல் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நிறுவனங்களுக்கு அந்தப் பணிகளுக்கான அனுமதியை வழங்கியமை தொடர்பிலேயே சந்தேகநபருக்கு எதிராகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக கையூட்டல், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்துக்கு அறிவித்தது.

குறித்த இரு நிறுவனங்களுக்கும் பணிகளை வழங்குவதற்காக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, பொறுப்பேற்கச் செய்தமையின் மூலம் 'ஊழல்' குற்றத்தைச் புரிந்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கையூட்டல், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் மேலும் தெரிவித்தது.

கையூட்டல், ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் கருத்திற்கொள்ளப்பட்ட பின்னரே நீதிமன்றம் சந்தேகநபருக்கு பிணையில் செல்ல அனுமதியை வழங்கியது.
Related recommendation
Hiru TV News | Programmes