General20 August 2026

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவை 500 ரூபாவாக அதிகரிக்க கோரிக்கை!

தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நாளாந்த அரசாங்கக் கொடுப்பனவை 500 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு வருகைக் கொடுப்பனவாக அரசாங்கம் 200 ரூபாவை வழங்கி வருகின்றது.

இந்தத் தொகையை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 500 ரூபாவாக அதிகரிப்பதுடன், பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தனியார் தோட்டங்களில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களும் இந்தக் கொடுப்பனவைப் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தகவல்களின்படி சுமார் 73 ஆயிரத்து 500 தொழிலாளர்களே தற்போது இந்த 200 ரூபாய் கொடுப்பனவைப் பெற்று வருகின்றனர்.

எனினும், பெருந்தோட்டங்களில் சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் பணியாற்றுவதாகவும், ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளர்கள், 60 வயதைக் கடந்தும் பணியாற்றுபவர்கள் உள்ளிட்ட பலர் இந்தக் கொடுப்பனவில் உள்ளடக்கப்படவில்லை எனவும் கணபதி கனகராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

சரியான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால், தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு இலட்சமாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தொழிலாளர்கள் தற்போது அதிகரித்துள்ள வேலைச் சுமை மற்றும் வாழ்க்கைச் செலவு பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும், அனைத்து தோட்டத் தொழிலாளர்களுக்கும் நியாயமான சம்பள உயர்வு கிடைக்கும் வகையில் சம்பள நடைமுறை திருத்தப்பட்டு, அது அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவு 500 ரூபாவாக அதிகரிக்கப்படும் நிலையில், அதற்கேற்ற வகையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தனியார் தோட்ட உரிமையாளர்களும் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என கணபதி கனகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes