General23 August 2026

ஜனாதிபதி செயலாளருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை - நாமல் வலியுறுத்தல்

ஜனாதிபதி செயலாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணைகளை நடத்தி, அரசாங்கம் தனது ஊழல் எதிர்ப்பு மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்பாட்டை நிரூபிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

குளியாப்பிட்டியவில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமானாயக்க, இலங்கை சுங்கத் திணைக்களத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய காலப்பகுதியை மையப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

ஊழலை ஒழிப்பதாகக் கூறும் ஜனாதிபதி, இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்து தனது நேர்மையை நிரூபிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

விவசாயிகள், பட்டதாரிகள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக அரசாங்கத்தைச் சாடிய அவர், நெல் கொள்முதல் விலை வீழ்ச்சி, அரிசி விலை உயர்வு, வரிச்சுமை, மின்சாரம் மற்றும் எரிபொருள் கட்டண உயர்வால் சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அரச நிறுவனங்கள் சார்ந்த பாதுகாப்பு மற்றும் இணையக் குற்றங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், துறைமுகக் கொள்கலன் சம்பவங்களுக்கும் எதிர்க்கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

அரசியல் மோதல்களைத் தவிர்த்து, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
Related recommendation
Hiru TV News | Programmes