General25 August 2026

இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர் இறுதிச்சடங்கிற்கு உயிருடன் வந்ததால் அதிர்ச்சி ! கல்கமுவவில் பரபரப்பு

குருநாகல் – கல்கமுவ, கோகோபன்குளம் கிராமத்தில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகக் காவல்துறையினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, இறுதிக்கிரியைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

இந்த நிலையில், இறந்ததாகக் கூறப்பட்டவர் தனது சொந்த இறுதிக்கிரியைக்கு உயிருடன் வீட்டிற்கு வந்த ஆச்சரியமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கோகோபன்குளம், கல்கமுவ பகுதியைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன என்பவர் நேற்று (24) திடீரென தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

வாரியபொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர், சிறைச்சாலையில் உயிரிழந்துவிட்டதாக நன்னேரிய காவல்துறையினர் அவரது உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தியால் அதிர்ச்சியும் துயரமும் அடைந்த உறவினர்களும் கிராம மக்களும் உடனடியாக இறுதிக்கிரியைக்கான ஏற்பாடுகளைச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கிராமம் முழுவதும் இறுதிக்கிரியைக்கான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, இறுதிச் சடங்கு மற்றும் தகனத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்த நிலையில், கீர்த்திசேன உயிருடன் வீட்டிற்குத் திரும்பி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இந்தச் சம்பவத்தையடுத்து, சிறைச்சாலை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு இடையே தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட கடுமையான குறைபாடுகள் மற்றும் அலட்சியப்போக்கு குறித்து பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes