International28 August 2026

சிற்றூந்து விவகாரத்தில் ஆளும், எதிர்க்கட்சியினர் இடையே அனல் பறந்த வாக்குவாதம்!

தமிழக சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் சிற்றூந்து வழங்குவது தொடர்பான விவாதத்தின்போது, தி.மு.க. ஆட்சியில் நடத்தப்பட்ட சிற்றூந்து பந்தயம் தொடர்பாக ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சிற்றூந்துகள் வழங்குவதால் என்ன பயன் என தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், தொகுதிகளுக்குச் சென்று மக்களின் பிரச்சினைகளை ஆய்வு செய்து பணியாற்றுவதற்காகவே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சிற்றூந்துகள் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய உதயநிதி, அரச கஜானாவில் பணம் இல்லை என கூறப்படும் நிலையில், சிற்றூந்துகள் வாங்குவதற்கான நிதி எவ்வாறு கிடைக்கிறது எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், தி.மு.க. ஆட்சியில் சிற்றூந்து பந்தயம் நடத்துவதற்காக ரூ.24 கோடி செலவிடப்பட்டதாகக் குறிப்பிட்டதுடன், “அந்தப் பணம் யாருடையது? அது உங்கள் வீட்டுப் பணமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் அமைச்சர் நேரு, உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது சர்வதேச தரத்தில் சிற்றூந்து பந்தயம் நடத்தப்பட்டதாகவும், அதற்கு பலரும் பாராட்டு தெரிவித்ததாகவும் கூறினார்.

மேலும், செங்கோட்டையன் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் பதக்கங்களுக்காக ரூ.10 கோடி செலவிடப்பட்டதாகவும் நேரு பதிலடி கொடுத்தார்.

தொடர்ந்து அமைச்சர் அருண்ராஜ், தி.மு.க. ஆட்சியில் நிதி நெருக்கடி இருப்பதாகக் கூறியபோதும், கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க முடிவு செய்தது குறித்து கேள்வி எழுப்பினார்.

இதனால் சட்டசபையில் ஆளும் தரப்பினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
Related recommendation
Hiru TV News | Programmes