General03 September 2026

எல் நினோ தாக்கத்தால் வேலையிழப்போருக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் பரிசீலனை

எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் வேலையை இழப்போருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் விசேட பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது.

அரசாங்கத்தின் எல் நினோ தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழுவின் நான்காவது கூட்டம், சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தலைமையில் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் போது எல் நினோ தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழக்கும் சமூகங்கள் மற்றும் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், நாட்டில் காய்கறிப் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுப்பதற்கும், காய்கறி மற்றும் பழச் செய்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குமான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

இதனிடையே, தற்போது எல் நினோ தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள 6 மாவட்டங்களில் உள்ள மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், தடையில்லா நீர் விநியோகத்தை முன்னெடுக்கும் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டன.

அத்துடன், எதிர்வரும் பெரும்போக செய்கைக்கான ஆயத்தங்கள் குறித்து எதிர்வரும் 4 ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தவும், பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களின் அதிகாரிகளுடன் ஸூம் வழியிலான கலந்துரையாடலை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த விசேட அமைச்சரவை உபகுழுவின் எதிர்வரும்14 ஆம் திகதி மீண்டும் கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes