General03 September 2026

22ஆவது திருத்தச்சட்ட மூல வழக்கு விசாரணை குறித்து பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் கடும் அதிருப்தி

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உயர்நீதிமன்ற விசாரணைகளைக் அவதானித்த பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தின் (Commonwealth Lawyers' Association) தலைவர் ஸ்டீவன் திரு, வழக்கின் இறுதித் தருணங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் மற்றும் விசாரணை நடைமுறைகள் குறித்துத் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.

இந்த அவதானிப்புகளின் அடிப்படையில் விசேட அறிக்கையொன்று தயாரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், மனுதாரர் தரப்புச் சட்டத்தரணிகள் தங்களது வாதங்களுக்கு வாய்மொழி மூலம் பதிலளிப்பதற்கான உரிமையை மறுத்து (Right of Reply), எழுத்துப்பூர்வமாக மட்டும் சமர்ப்பிப்புகளை வழங்குமாறு கோரப்பட்டமையானது பெரும்பாலான நீதித்துறை வரம்புகளில் வழக்கமாக இடம்பெறாத ஒன்று எனக் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறானதொரு முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் வாய்மொழி மூல பதிலளிப்புக்கான உரிமை கட்டாயம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், நீதித்துறையின் சுதந்திரம் சார்ந்த இந்த முக்கிய வழக்கை விசாரிப்பதற்கு பூரண நீதியரசர்கள் ஆயம் (Full Bench) அல்லது விரிவான நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்படாமையும், உயர்நீதிமன்றத்தின் ஏனைய சிரேஷ்ட நீதியரசர்கள் இந்த ஆயத்தில் இடம்பெறாமையும் சட்டத்தரணிகள் மத்தியில் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஏனைய நாடுகளில் இவ்வாறான முக்கிய வழக்குகளின் போது மிக சிரேஷ்ட நீதியரசர்கள் இணைந்து அமர்வில் பங்கேற்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமை தாங்குவது தொடர்பில் வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தவிர்க்கும் பொருட்டு, அவர் இந்த வழக்கிலிருந்து விலகி வேறு தரப்புக்கு வாய்ப்பளித்திருக்கலாமா என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், வழக்கின் சட்டப்பூர்வமான வாதங்களை விட நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதே முக்கியமானது என அவர் அழுத்தமாகக் கூறினார்.

நீதித்துறை சுதந்திரத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால், சட்டக் கோட்பாடுகள் பற்றி வாதிடுவதில் பலனில்லை என்றும், குடிமக்களின் கடைசி அரணாக விளங்கும் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை சீர்குலைந்தால், அதை மீண்டும் கட்டியெழுப்பப் பல ஆண்டுகள் ஆகும் என்றும் எச்சரித்தார்.

எனவே, இந்த முழுமையான செயன்முறையின் பின்னர் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதா அல்லது சீர்குலைந்துள்ளதா என்பது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes