International03 September 2026

நேபாள வெள்ளப்பெருக்கு: கடன்பாட்டில் பணத்தைப்பெற்று காணாமல் போன மகனைத் தேடி பல மைல்கள் நடைபயணம் மேற்கொள்ளும் தந்தை!

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் காணாமல் போன தனது ஒரே மகனைக் கண்டுபிடிக்க, ஏழைத் தந்தை ஒருவர் கடன் வாங்கி, பல கிலோமீற்றர் தூரம் கால்நடையாகத் தேடி அலைந்து வரும் சோக சம்பவம் வெளியாகியுள்ளது.

நேபாளத்தின் தராய் (Terai) பகுதியைச் சேர்ந்த டல்கா சாதா (Talka Sada) என்பவரின் 19 வயது மகன் வினோத், ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் உள்ள நீர்மின் நிலையத் திட்டப் பகுதி ஒன்றில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஆகஸ்ட் 26 ஆம் திகதி போட்டேகோஷி ஆற்றினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், அந்த நீர்மின் நிலையப் பகுதியில் இருந்த வினோத் உட்பட பல தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.

மிகவும் வறுமை நிலையில் உள்ள டல்கா சாதா, நூறு ரூபாய்க்கு இருபது ரூபாய் வட்டி என்ற அதிக வட்டிக்கு 2,000 நேபாள ரூபாய்களைக் (சுமார் 13 அமெரிக்க டொலர்) கடனாகப் பெற்றுள்ளார்.

அந்தப் பணத்தைக் கொண்டு தனது சகோதரருடன் தலைநகர் காத்மண்டு வருகை தந்த அந்த நபர் மருத்துவமனைகளில் தனது மகன் கிடைக்காததால், சேதமடைந்த மலைப்பாதைகள் வழியே அவர் தனது மகன் பணியாற்றிய நுவாகோட் நீர்மின் நிலையத்தை நோக்கி கால்நடையாகத் தேடிச் செல்கிறார்.

இந்த நிலையில் , இராணுவ முகாம்களும் காவல்துறை அதிகாரிகளும் தங்களுக்கு உரிய உதவிகளை வழங்காமல் அலட்சியப்படுத்துவதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ள நிலையில், மீட்புப் பணிகளை விரைவுபடுத்தி வருவதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes