General03 September 2026

22வது அரசியலமைப்புத் திருத்த வழக்கு: இளம் சட்டத்தரணிகளின் பங்களிப்பைப் பாராட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்!

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில், நேற்றும், நேற்று முன்தினமும் இடம்பெற்றது.

இந்த விசாரணைகளின் போது இளம் சட்டத்தரணிகள் பெருமளவில் முன்வந்து கொள்கை ரீதியான வலுவான வாதங்களை முன்வைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் இது தொடர்பாகப் பதிவிட்டுள்ள அவர், இளம் சட்டத்தரணிகள் இளநிலை சட்ட ஆலோசகர்களாகவும், வழிகாட்டும் சட்டத்தரணிகளாகவும் (Instructing Attorneys) சட்டச் செயல்பாட்டில் தீவிரமாகப் பங்காற்றியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாம் நம்பும் கொள்கைகள் மற்றும் ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில், இளம் சட்டத்தரணிகள் இத்தகைய துணிச்சலான நிலைப்பாட்டை எடுத்துச் செயற்படுவதைக் காண்பது மிகவும் பாராட்டத்தக்கது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், இலங்கையின் நீதித்துறைச் சுதந்திரம் மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் இடம்பெறும் இந்த முக்கிய வழக்கு விசாரணையில், சிரேஷ்ட சட்டத்தரணிகளுக்கு இணையாக இளம் சட்டத்தரணிகளின் தீவிர பங்களிப்பு நாட்டின் சட்டத் துறைக்கு ஆரோக்கியமான முன்னுதாரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes