General03 September 2026

ஊழல் தடுப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் தடுப்பு திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான உயர் நீதிமன்ற விசாரணை ஆரம்பமானது.

இந்த மனுக்கள், ஷிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட தரப்பினரால் குறித்த சட்டமூலத்திற்கு எதிராக மொத்தம் 14 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முன்மொழியப்பட்ட சட்டமூலத்தில் உள்ள சில ஏற்பாடுகள், அரசியலமைப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள மக்களின் இறையாண்மை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதாரர்கள் தமது மனுக்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், இந்தச் சட்டமூலத்தின் மூலம் தகவல் அறியும் உரிமையும் பாதிக்கப்படக்கூடும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, குறித்த சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டுமெனில், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டதுடன், மக்கள் வாக்கெடுப்பிலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes