General05 September 2026

எதிர்கால திட்டங்கள் அரசாங்கத்திடம் இல்லை: தேயிலை தொழிலை பாதுகாக்க திகாம்பரம் கூறும் ஆலோசனைகள்!

எதிர்காலத்தில் தேயிலைத் தொழில் பெரும்பாலும் இலங்கையைப் பொறுத்தவரையில் இல்லாமல் போகுமோ என்ற அச்சம் நிலவுவதாக முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

புதிய தேயிலை உற்பத்தி அல்லது நடுகை போன்ற பெரிய திட்டங்களை இந்த அரசாங்கம் கொண்டிருக்காத காரணத்தில் எதிர்காலத்தில் தேயிலைத் தொழில் இல்லாமல் போகுமோ என்ற அச்சம் நிலவுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தேயிலையை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் இருப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

எப்போதும் மலையக மக்களைப் பற்றிக் கூறும்போது அவர்களின் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டாலும், அதற்கு என்ன நடக்கப் போகிறது என்ற கேள்வி எழுகிறது.

தற்போது 30 முதல் 40 வயதுள்ளவர்கள் மற்றும் 25 முதல் 30 வயதுள்ள இளைஞர்கள் பலர் வேலைக்குச் செல்லாமல் தவிர்க்கும் நிலை காணப்படுகிறது.

படித்த இளைஞர்கள் தோட்டத் தொழில்களுக்குச் செல்வதை விரும்புவதில்லை. இதனால் எதிர்காலத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாக பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அரசாங்கம் மாறும்போது வழங்கப்படும் சொற்ப சம்பள உயர்வுகள் மற்றும் நாளாந்தத் தொகை போதாது எனவும், இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு காணத் தோட்டங்களைச் சிறு தோட்ட உரிமையாளர்களிடம் வழங்குவது அல்லது குத்தகைக்கு விடுவது போன்ற திட்டங்கள் அவசியமானது எனவும் சுட்டிக்காட்டினார்.

அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை வழங்கிவிட்டுப் பின்னர் மக்களின் பிரச்சினைகளை மறந்துவிடுவதாகவும், மலையக மக்களின் அடிப்படை வாழ்வாதார மேம்பாட்டிற்கான முறையான நீண்டகாலத் திட்டங்கள் எவையும் முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லை எனவும் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் குற்றஞ்சாட்டினார்.
Related recommendation
Hiru TV News | Programmes