General05 September 2026

நீண்ட தூர பேருந்துகளில் AI தொழில்நுட்பம் – பாதுகாப்பு கண்காணிப்பு திட்டம் ஆரம்பம்

நீண்ட தூரப் பயணிகள் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்திற்கான தொழில்நுட்ப உபகரணங்களைப் பொருத்தும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேசிய வீதிப் பாதுகாப்புச் சபையின் ஒருங்கிணைப்பில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் தனியார் பேருந்துகளில் இந்தத் தொழில்நுட்ப உபகரணங்களைப் பொருத்தும் பணிகள் கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பையும், சாரதிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதன் முதற்கட்டமாக, நீண்ட தூர சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டத்தில் 10 பேருந்துகளில் தொழில்நுட்ப உபகரணங்கள் பொருத்தப்படவுள்ளன.

அவற்றின் செயல்பாடுகள் மற்றும் பெறப்படும் முடிவுகளைத் தொடர்ந்து கண்காணித்த பின்னர், அனைத்து பேருந்துகளிலும் இந்த AI தொழில்நுட்பத்தை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், பேருந்து பயணத்தை ஆரம்பிக்கும் தருணம் முதல் இலக்கை அடையும் வரை சாரதியின் செயற்பாடுகள் மற்றும் பேருந்தின் உட்புறச் சூழ்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதி அல்லது பயணிகள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் வகையில் செயற்பட்டால், அதனை உடனடியாக அடையாளம் காணும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பாதுகாப்புப் பட்டி அணியாமை, சாரதி சோர்வான நிலையில் இருப்பது, பேருந்தைச் செலுத்திக்கொண்டிருக்கும்போது கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பற்ற செயற்பாடுகள் கண்டறியப்பட்டால், பாதுகாப்பு சாதனம் மூலம் உடனடியாகக் குரல் எச்சரிக்கை வழங்கப்படும்.

இதன்மூலம், பாதுகாப்பற்ற நிலைமைகளை உடனடியாகக் கண்டறிந்து, அவற்றைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes