General05 September 2026

மலையேற்ற வீரர்களின் சிறுநீரும் எவரெஸ்ட் பனிப்பாறை உருகுவதற்கு ஒரு காரணமாம்!

இமய மலைத்தொடரில் அமைந்துள்ள உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்ற வீரர்கள் சிறுநீர் கழிப்பது கூட அங்குள்ள பனிப்பாறைகள் உருகுவதற்கு ஒரு காரணமாக அமைவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

'Regional Environmental Change' என்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் இந்த விடயம் வெளியாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் அடிவார முகாம் அமைந்துள்ள கும்பு (Khumbu) பனிப்பாறைப் பகுதியில் தங்கியிருந்த மலையேற்ற வீரர்களின் பல்வேறு நடவடிக்கைகளால் சுமார் 2,492 டன் பனியும், அவர்கள் சிறுநீர் கழித்ததால் மட்டுமே 154 டன் பனியும் உருகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

நேபாள நில அளவைத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட ஆய்வாளர் கிம் லால் கௌதம் (Khim Lal Gautam) உள்ளிட்ட சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு, 'கும்பு' (Khumbu) பனிப்பாறைப் பகுதியில் 2023 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மனித நடவடிக்கைகளை ஆய்வு செய்து இந்த முடிவுகளை வெளியிட்டனர்.

சுமார் 50 நாட்கள் நீடிக்கும் எவரெஸ்ட் மலையேற்றக் காலத்தில், வீரர்கள் மற்றும் வழிகாட்டிகளால் நாளொன்றுக்கு 6,000 லீட்டருக்கும் அதிகமான சிறுநீர் வெளியேற்றப்படுகிறது. அதிக உயரத்தில் உடலின் நீர்ச்சத்தைப் பேணுவதற்காக மலையேற்ற வீரர்கள் அதிகளவில் நீரைக் குடிப்பதால் இவ்வாறு நிகழ்கிறது.

திடக் கழிவுகள் அகற்றப்பட்ட போதிலும், சிறுநீர் நேரடியாகப் பனிப்பாறைகளின் மீதே வெளியேற்றப்படுவதால், அதிலிருந்து வெளிப்படும் வெப்ப ஆற்றல் பனியை உருக்கும் திறன் கொண்டது என கணக்கிடப்பட்டுள்ளது.

அத்துடன், முகாமில் சமையல், வெப்பமூட்டுதல் மற்றும் மின்சாரத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் எரிபொருட்களிலிருந்து வெளிப்படும் வெப்பமும் சேர்ந்து மொத்தம் 2,492 டன் பனி மற்றும் பனிப்பாறைகள் உருகுவதற்குக் காரணமாக அமைவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றமே எவரெஸ்ட் பனிப்பாறைகள் உருகுவதற்குப் பிரதான காரணம் என்ற போதிலும், அடிவார முகாமில் குவியும், மனிதர்களின் தினசரி நடவடிக்கைகள் அந்த பகுதியின் வெப்பநிலையை உயர்த்தி பனி உருகுதலை மேலும் துரிதப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes