General06 September 2026

இந்தோனேசியாவில் 101 பறவைகளை கடத்த முயன்ற இலங்கையர் கைது!

இந்தோனேசியாவில் இருந்து பல்வேறு வகையைச் சேர்ந்த 101 பறவைகளை சட்டவிரோதமாக கடத்த முயன்ற இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தோனேசியாவின் பான்டென் (Banten) பகுதியில் அமைந்துள்ள சர்வதேச வானூர்தி நிலையத்தில் வைத்து நேற்று (5) இவர் கைது செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சந்தேகநபரின் பயணப் பொதியை பரிசோதித்த போது, அதில் இருந்த 15 சிறிய பெட்டிகளுக்குள் மிக கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 101 பறவைகளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பறவைகளில் சில வகைகள் இந்தோனேசியாவின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்களின் கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளவை எனத் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இலங்கையர் தொடர்பான மேலதிக விசாரணைகளை இந்தோனேசிய சட்ட அமுலாக்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes