General09 September 2026

குடியிருப்புகளுக்கு அருகில் உலா வரும் சிறுத்தை – மக்களுக்கு அவசர எச்சரிக்கை

பொகவந்தலாவை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தேயிலைத் தோட்டம் ஒன்றில் சிறுத்தையொன்று அடிக்கடி நடமாடுவதாக, தோட்டத் தொழிலாளி ஒருவர் காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளார்.

தேயிலைத் தோட்டத்தில் நடமாடிய சிறுத்தையை தனது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்த குறித்த தொழிலாளி, அந்தப் புகைப்படத்தையும் காவல்துறையிடம் சமர்ப்பித்துள்ளார்.

குறித்த சிறுத்தை இரை தேடி, தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு அருகில் தினமும் வருவதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, பொகவந்தலாவை காவல் நிலையப் பொறுப்பதிகாரி நுவன் மதுசங்க தெரிவித்துள்ளார்.

இதனால், தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, வனவிலங்கு அதிகாரிகளுக்கு இது தொடர்பில் அறிவித்து, சிறுத்தையை அருகிலுள்ள போபத்தலாவ வனப்பகுதிக்கு பாதுகாப்பாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த தொழிலாளி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையடுத்து, சம்பவம் தொடர்பில் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்கு அறிவிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொதுமக்கள் சிறுத்தையை அணுகவோ, அதனைத் துரத்தவோ அல்லது அச்சுறுத்தவோ வேண்டாம் எனவும், சிறுத்தையின் நடமாட்டம் தொடர்பில் உடனடியாக வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes