General08 September 2026

நாடாளுமன்றம் வர நாமலுக்கு அனுமதி!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இன்று (8) நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் வழங்கியுள்ள அனுமதியின் அடிப்படையில், அவர் நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்படுவார் என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான சேனக்க பல்லேதன்ன தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஊடாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த கோரிக்கைக்கு அமைய அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் குடும்ப உறவினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, அவருக்கு வீட்டிலிருந்து கொண்டுவரப்படும் உணவை உட்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விளக்கமறியலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் நலன் விசாரிப்பதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் நேற்று விளக்கமறியல் சிறைச்சாலைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes