General09 September 2026

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் பயணத்தின் எதிரொலி - கொழும்பு வந்தடைந்தது 'ஐ.என்.எஸ் உதயகிரி' போர்க்கப்பல்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைப் பயணத்தையொட்டி, இந்திய கடற்படையின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பல்நோக்கு மறைமுகப் போர்க்கப்பலான 'ஐ.என்.எஸ் உதயகிரி', மூன்று நாள் செயல்பாட்டுப் பராமரிப்புப் பணிகளுக்காக நேற்று (08) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் தகவல்படி, நடமாடும் பயிற்சிக் குழுவின் மூலம் தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் அனுபவப் பகிர்வு வழியாக இலங்கை கடற்படையுடனான இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேலும், இந்தப் போர்க்கப்பல் இலங்கை கடற்படை மற்றும் வானூர்திப்படை ஆகிய இரண்டிற்கும் தேவையான அத்தியாவசிய இயந்திரங்கள் மற்றும் உபகரண உதிரிப்பாகங்களையும் கொண்டு வந்துள்ளது.

இலங்கைக்கான இந்தப் பயணத்தின் போது, கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் விகாஸ் சூட், மேற்கு கடற்படைப் பகுதியின் தளபதியான ரியர் அட்மிரல் ஜி.எச்.எஸ்.இ. டி சில்வாவை உத்தியாகபூர்வமாக சந்திக்கவுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சரின் பயணத்தின் ஒரு பகுதியாக, இலங்கை பிரமுகர்களுக்காக ஐ.என்.எஸ் உதயகிரி கப்பலில் விசேட வரவேற்பு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, கப்பலின் குழுவினர் தங்களது இலங்கை கடற்படைச் சகாக்களுடன் தொழில்முறை மற்றும் விளையாட்டுத் தொடர்புகளில் ஈடுபடவுள்ளதுடன், "க்ளீன் ஸ்ரீலங்கா" திட்டத்திற்கு ஆதரவாகக் கொழும்பில் நடைபெறும் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டத்திலும் கலந்துகொள்ளவுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes