General09 September 2026

இந்தியப் பெருங்கடல் பாதுகாப்புக்கு இலங்கை முழுமையான ஒத்துழைப்பு - ஜனாதிபதி!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் தொடர்ந்து உறுதிப்படுத்துவதற்கு இலங்கை தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இடையிலான சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய மற்றும் பிராந்திய நலன்களை கருத்திற்கொண்டே இலங்கை தனது தீர்மானங்களை மேற்கொள்வதாகவும், இறையாண்மை கொண்ட நாடாக பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்களில் ஈடுபடும்போது பிராந்திய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பாதுகாப்புப் படைகளின் திறன் மேம்பாடு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இன்று பரிமாறிக்கொள்ளப்பட்ட புதிய ஒப்பந்தங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதேவேளை,இலங்கை எதிர்கொண்ட பல்வேறு நெருக்கடியான சந்தர்ப்பங்களில் இந்தியா வழங்கிய ஆதரவுக்கும் ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கப்படுவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை மோதல்கள் அற்ற அமைதியான பிராந்தியமாக பேணுவதற்கு இலங்கை வழங்கி வரும் பங்களிப்பை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் அவர் பாராட்டியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes