General12 September 2026

"இரும்பு கம்பிகளுக்கு மத்தியிலும் உங்களை நான் பார்க்கிறேன்” சிறையிலிருந்து நாமல் செய்தி!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தான் எதிர்கொள்ளும் சவால்கள் தன்னை உடைத்துவிடாது என்றும், மாறாக மேலும் பலப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இருக்கும் தமக்கு, ஆதரவாகத் திரண்டுவரும் பொதுஜன பெரமுன ஆதரவாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியிலேயே அவர் இதனைப் பகிர்ந்துள்ளார்.

"கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் இரும்பு கம்பிகளுக்கு மத்தியிலும் உங்களை நான் பார்க்கிறேன். உங்களின் உற்சாகமான ஆதரவு எனக்குப் பெரும் ஊக்கமளிக்கிறது" என ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் கூற்றை மேற்கோள்காட்டிய நாமல் ராஜபக்ஷ, "துன்பங்கள் சிலரை உடைத்துவிடும்; ஆனால் சிலரை மேலும் பலப்படுத்தும். நாங்கள் சவால்களுக்கு மத்தியிலும் துன்பங்களை எதிர்கொள்ளும் போதும் மேலும் பலமடைபவர்கள். சவால்களைக் கண்டு அஞ்சாமல் பலமடையும் பாடத்தை என் அன்புக்குரிய தந்தை எனக்குக் கற்றுக்கொடுத்துள்ளார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கஷ்டங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் மக்களுடன் இணைந்து ஒரு அரசியல் இயக்கத்தை வழிநடத்துவதை தான் பெரும் பாக்கியமாகக் கருதுவதாகவும் அவர் தனது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes