General14 September 2026

“திருடர்களைப் பிடிப்பதில் எல்லை எதுவும் இல்லை: எஞ்சிய பதவி காலத்தில் சகலருக்கும் தண்டனை!”

மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்த ஊழல்வாதிகளையும் குற்றவாளிகளையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்காகவே நாட்டு மக்கள் தமது அரசாங்கத்திற்குத் தெளிவான ஆணையை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

அனுராதபுரம் - கஹட்டகஸ்திகிலிய பகுதியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்துகொண்டு ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

தற்போதைய சட்ட நடவடிக்கைகளை அரசியல் பழிவாங்கல் என சிலர் சாயம் பூச முயல்வதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த காலங்களிலேயே உண்மையான பழிவாங்கும் அரசியல் இடம்பெற்றதாக நினைவு கூர்ந்தார்.

குறிப்பாக, 2010ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஜெனரல் சரத் பொன்சேகா தங்கியிருந்த விடுதியை இராணுவத்தினரால் சுற்றி வளைத்து அவரைக் கைது செய்தமை, ஊடக நிறுவனங்கள் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தியமை, ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தமை மற்றும் கடத்தியமை, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அதிகாரிகளைப் பழிவாங்கும் நோக்கில் சிறையிலடைத்தமை போன்ற சம்பவங்களே உண்மையான அரசியல் பழிவாங்கல்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.

தமது அரசாங்கம் எவ்வித பழிவாங்கல்களிலும் ஈடுபடவில்லை என்றும், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் போன்ற சுயாதீன நிறுவனங்களுக்குத் தேவையான மனித வளம், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் சட்ட அதிகாரங்களை வழங்கி அவற்றை வலுப்படுத்த மட்டுமே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விசாரணைகளையும் வழக்குகளையும் விரைவுபடுத்துவதற்காக கொழும்பில் மட்டும் புதிதாக 7 மேல் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, தேவையான ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நீதி தேவதை கண்மூடி நடுநிலையாகச் செயற்படுவது போல, குற்றம் சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும், எவ்வளவு செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அவர் வலியுறுத்தினார்.

ஊழல்வாதிகளையும் திருடர்களையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு எந்தவொரு எல்லையும் கிடையாது என்றும், எஞ்சியுள்ள பதவிக் காலத்தில் அனைத்துக் குற்றவாளிகளுக்கும் எதிராக சட்டப்படி தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes