General15 September 2026

போக்குவரத்து சமிக்ஞையை மீறி ஆபத்தான முறையில் பேருந்தை செலுத்திய சாரதி மீது சட்ட நடவடிக்கை

கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியில், தெல்கந்த சந்திக்கு அருகில் சிவப்பு போக்குவரத்து சமிக்ஞையை சட்டவிரோதமான முறையில் மீறிச் சென்றதாகக் கூறப்படும் பேருந்தின் சாரதிக்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த செப்டெம்பர் 12ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

குறித்த காணொளியில், போக்குவரத்து சமிக்ஞை சிவப்பு நிறத்தில் காணப்பட்டபோது, பேருந்து அந்தச் சந்தியின் இடதுபுறமுள்ள வீதிக்குள் திருப்பப்பட்டுள்ளது.

பின்னர், பிரதான வீதியில் உள்ள சிவப்பு சமிக்ஞையைத் தவிர்த்து குறுக்கு வீதி வழியாகச் சென்று மீண்டும் பிரதான வீதியில் இணையும் வகையில் பேருந்து செலுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, பேருந்தின் உரிமையாளர் மிரிஹான போக்குவரத்துக் காவல் பிரிவுக்கு அழைக்கப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதன்போது, சம்பவம் இடம்பெற்ற வேளையில் பேருந்தைச் செலுத்திய சாரதியை மூன்று நாட்களுக்குள் காவல் நிலையத்தில் முன்னிலைப்படுத்துமாறு பேருந்தின் உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

அத்துடன், குறித்த சாரதி போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளாரா? என்பதைக் கண்டறிவதற்காக, போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் சாரதியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes