General17 September 2026

ஜனாதிபதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) செயல்பாட்டு பிரிவின் தலைமை அதிகாரி இவான் பபகியோர்ஜியு உள்ளிட்ட பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கையின் பொருளாதாரம் தற்போது ஸ்திரத்தன்மையை நோக்கிய பாதையில் பயணித்து வருவதாகவும், அண்மைய பொருளாதாரக் குறிகாட்டிகள் இதனை வெளிப்படுத்துவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு நாட்டை மாற்றத்திற்கான புதிய கட்டத்தை நோக்கி கொண்டு செல்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆதரவையும் வலுவான அடித்தளத்தையும் ஜனாதிபதி இதன்போது நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.

இதனிடையே, இலங்கை அண்மைக்காலத்தில் பதிவு செய்துள்ள பொருளாதார முன்னேற்றம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தங்களது மதிப்பீட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும், அரச வருமானத்தை அதிகரித்தல், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் நிதி ஒழுக்கத்தைப் பேணுதல் உள்ளிட்ட விடயங்களில் கடந்த காலப்பகுதியில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது பாராட்டு தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes