General19 September 2026

அனோஜனுக்காக முன் நிற்க அரசாங்கம் தயங்காது: நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான அனோஜனுக்கு இராஜதந்திர ரீதியில் மன்னிப்பைப் பெற்றுக்கொடுக்க எடுக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் தயங்காது என தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவில் மத நிந்தனைக் குற்றச்சாட்டின் கீழ், அங்கு பணியாற்றி வந்த அனோஜன் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் எமது செய்திப்பிரிவுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது அவர் தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்புக் கோரியுள்ளதாகக் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், அவர் ஓர் இலங்கைப் பிரஜை என்பதால் விடுதலை பெற வேண்டும் என்பதே அனைவரினதும் விருப்பம் எனக் கூறினார்.

இது தொடர்பாக விடயப்பரப்பிற்குரிய அமைச்சருடன் பேசப்பட்டுள்ளதாகவும், தீர்ப்பு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அரசாங்கம் மேலதிக நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சிலர் இந்த விவகாரத்தை அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்த முயல்வதாகவும், அதனைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

எதுஎவ்வாறாயினும், தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுள்ள அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே பெரும்பான்மையானோரினதும் அரசாங்கத்தினதும் நிலைப்பாடாக உள்ளது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes