Sports16 June 2026

வைபவ் சூர்யவன்ஷி, இலங்கை A அணி வீரர்களுடன் முரண்பட்டது ஏன்? வெளியானது காரணம்

இலங்கை A மற்றும் இந்தியா A அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடரின் 4ஆவது போட்டியில், சுப்பர் ஓவருக்குப் பின்னர் இந்திய இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் இலங்கை வீரர்களுக்கு இடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மைதானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் தலா 265 ஓட்டங்களைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் (Tie) முடிவடைந்தது. இதன்பின்னர் வெற்றியாளரைத் தீர்மானிக்க நடத்தப்பட்ட சுப்பர் ஓவர் சுற்றில் இலங்கை A அணி வெற்றி பெற்றது.

போட்டி முடிந்தவுடன், இலங்கை A அணியின் விஷேன் ஹலம்பகே (Vishen Halambage), இந்தியாவின் 15 வயதான இளம் துடுப்பாட்ட வீரர் வைபவ் சூர்யவன்ஷியை நோக்கி, "போட்டி முடிந்துவிட்டது... இனி நீ வீட்டுக்கு போ..." என்று வம்புக்கு இழுக்கும் வகையில் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சூர்யவன்ஷி, இலங்கை வீரரை நோக்கிச் செல்ல, இருவருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு உடல் ரீதியான மோதலாக மாறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலைமை மோசமடைவதைத் தடுக்க நடுவர்களும், இரு அணியின் ஏனைய வீரர்களும் உடனடியாகத் தலையிட்டு இருவரையும் விலக்கிவிட்டனர்.

பொதுவாக 'A'அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் சர்வதேச கிரிக்கெட் பேரவை தலையிடுவதில்லை என்றாலும், இந்த மோதல் காரணமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

மைதானத்தில் போதிய வெளிச்சமின்மை காரணமாக சுப்பர் ஓவர் நடத்துவதில் சிக்கல் நீடித்தது. இலங்கை அணி சுப்பர் ஓவர் விளையாட விரும்பாத நிலையில், இந்திய அணியின் தலைவர் திலக் வர்மா நடுவர்களுடன் தீவிரமாக விவாதித்து, சுப்பர் ஓவர் நடத்தியே தீர வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்ததாகக் கூறப்படுகிறது.

இந்தியா துடுப்பெடுத்தாடும் போது வெளிச்சம் மேலும் குறைந்தால் ஆட்டம் நிறுத்தப்படும் என்ற நிபந்தனையுடன் நடுவர்கள் ஆட்டத்தைத் தொடங்கினர்.

ஆனால், வெளிச்சம் மிக மோசமடைந்த போதிலும் நடுவர்கள் ஆட்டத்தை நிறுத்தவில்லை. இது குறித்துப் போட்டியின் பின்னர் கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன (SLC) அதிகாரி ஒருவர், "முதலில் அங்கு ஒரு சுப்பர் ஓவர் நடத்தப்பட்டிருக்கவே கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த சம்பவம் குறித்து இலங்கை அணியின் ஓய்வறையிலும் (Dressing Room) கலந்துரையாடப்பட்டதோடு, இந்திய அணியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes