General01 May 2026

மாத்தறை மக்களின் நீண்ட நாள் கவலைக்கு தீர்வு - கடும் வறட்சிக்கு முற்றுப்புள்ளி

மாத்தறை மாவட்டத்தில் உள்ள பாஸ்கொட பிரதேச சபை பிரிவில் நிலவி வந்த கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக, உருபொக்க மணங்கெட்டிய பகுதியில் பாரிய நிலத்தடி நீர் ஆதாரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நீர் ஆதாரம் நேற்று (30) கண்டுபிடிக்கப்பட்டதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

பாஸ்கொட பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் 10,000 குடும்பங்களைச் சேர்ந்த 50,000க்கும் அதிகமான மக்கள் இந்த குடிநீர்த் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உருபொக்க பிரதேசத்தின் கிணறுகளில் லேசான வறட்சியின் போது கூட நீர் மட்டம் குறைந்து வருவதாக மக்கள் கவலை தெரிவித்திருந்தனர். மேலும், தற்காலிக நிவாரணமாக மேற்கொள்ளப்படும் நீர் விநியோகம் முறையாக நடைபெறவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டது.

உருபொக்க நகரம், தம்பஹல வீதி, புலங்கந்த வீதி, ஹீகொட வீதி, அமுஹெங்கொட, ஹொரகாஸ்மந்திய, கட்டுவான வீதி மற்றும் கீரபிட்டிய வீதி ஆகியவற்றின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஹீகொட மருத்துவமனை மற்றும் புலங்கந்த, பத்திகால, கீரபிட்டிய, கின்னலிய, பெரலபனதர ஆகிய இடங்களில் உள்ள பாடசாலைகளின் அன்றாட நடவடிக்கைகளும் இதனால் பாதிக்கப்பட்டன.

பாஸ்கொட பிரதேச சபையின் வேண்டுகோளுக்கு இணங்கவே தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தெற்கு மாகாணத்திற்குப் பொறுப்பான புவியியலாளர் இந்திரஜித் கமகே தலைமையில் இந்த பாரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நீர் ஆதாரத்தின் மூலம் அப்பகுதியில் நிலவி வரும் குடிநீர்த் தட்டுப்பாட்டிற்கு தீர்வு காண முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதையும் பார்க்க..



Related recommendation
Hiru TV News | Programmes