General07 May 2026

தரம் 6 மாணவர் அனுமதி - இரண்டாம் கட்ட மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்

2025ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2026-ஆம் கல்வியாண்டிற்கான பாடசாலை அனுமதி நடைமுறையில் இரண்டாம் கட்ட மேன்முறையீட்டு விண்ணப்பங்களைக் கோருவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, தகுதியுள்ள மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் நாளை ( 08) முதல் இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் ஊடாகச் சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நாளை( 08) ஆரம்பமாகி மே 29 ஆம் திகதி வரை முடிவடைகின்றது.

விண்ணப்பங்களை பெற்றுக்கொள்வதற்காக www.moe.gov.lk என்ற உத்தியோகபூர்வ இணையதள முகவரியின் ஊடாக அணுகமுடியும்.

இதேவேளை நேரடி விண்ணப்பத்தை http://g6application.moe.gov.lk என்ற இணையதளம் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

மாணவர் சேர்க்கை நடைமுறையில் அதிகபட்ச வெளிப்படைத்தன்மையைப் பேணவும், வினைத்திறனை அதிகரிக்கவும் இந்த முறைமை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. எனவே, இணையதளம் ஊடாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

மேன்முறையீடு செய்யும் ஒரு விண்ணப்பதாரர் தமக்கு விருப்பமான அதிகபட்சம் மூன்று (03) பாடசாலைகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மதிப்பெண்கள் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தகுதியான மாணவர்களுக்கு உரிய பாடசாலைகளை ஒதுக்கீடு செய்வதை உறுதிப்படுத்துவதற்காக இந்த மேன்முறையீட்டு வாய்ப்பு வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட மே 29-ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்படும் எந்தவொரு விண்ணப்பமும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.

தொழில்நுட்பக் கோளாறுகளைத் தவிர்க்கும் பொருட்டு, கடைசி நேரம் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலதிக விபரங்களுக்கு கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.


Related recommendation
Hiru TV News | Programmes