General14 June 2026

ஒடுக்குமுறைகளை விடுத்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குக - அரசாங்கத்திற்கு நாமல் வலியுறுத்தல்

தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களையும் அரசியல்வாதிகளையும் ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை, மறுபுறம் ஒட்டுமொத்த பொதுமக்களையும் கடுமையான அழுத்தங்களுக்கு உள்ளாக்கி வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அளவற்ற வரிச்சுமை, பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள், அத்துடன் தாங்கிக்கொள்ள முடியாத வாழ்க்கைச் செலவு என்பவற்றின் காரணமாக இன்று நாட்டின் நுகர்வோரும் விவசாயிகளும் அனாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை, பதியத்தலாவ பகுதியில் நேற்று (13) நடைபெற்ற தொகுதி கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

"கடந்த வெசாக் பௌர்ணமி தினத்தன்று அரசாங்கமும் இணைந்து வெசாக் பூசைகளை நடத்தியது. ஆனால், வெசாக் உற்சவம் முடிந்த மறுநாளே மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டது.

 ஏனைய நாட்களில் முடியாவிட்டாலும், விகாரைகளுக்கு வெசாக் மற்றும் பொசன் பௌர்ணமி தினங்களிலாவது மின்சாரக் கட்டணத்தில் ஒரு தற்காலிக நிவாரணத்தை அரசாங்கத்தால் வழங்க முடிந்திருக்க வேண்டும்."

அம்பாறை, பதியத்தலாவ பகுதி மக்கள் மண்ணோடு போராடி விவசாயத்தில் வாழும் மனிதர்கள் எனச் சுட்டிக்காட்டிய அவர், விவசாயிகள் தங்களது விளைச்சலுக்கு நியாயமான விலையை எதிர்பார்ப்பதாகவும், அதேநேரம் நுகர்வோரின் விலை குறித்தும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இடைத்தரகர்களின் தேவைக்காக மரக்கறிகள் , அரிசி மற்றும் பழங்களை வெளியில் இருந்து இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால் உள்நாட்டு விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

அன்று எமது ஆட்சிக் காலத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்குச் சோளம் ஏற்றுமதி செய்யப்பட்டது.

ஆனால், இன்று உள்நாட்டு அறுவடை காலத்திலேயே டொலர்களைக் கொடுத்து வெளிநாடுகளில் இருந்து சோளம் இறக்குமதி செய்யப்படுகிறது.

இதனால் நாட்டின் டொலர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதுடன், அரசாங்கத்தின் சில நண்பர்களின் இலாபத்திற்காகவே இத்தகைய திட்டமிடப்பட்ட முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

அரசாங்கம் இன்று அனைத்து வழிகளிலும் ஒடுக்குமுறைகளுக்குத் தயாராகி வருவதாகக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ச,

அரசியல் ரீதியாக சிறையில் அடைப்பதனாலோ அல்லது வழக்குகளைத் தொடர்வதனாலோ மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காது என்றும், இந்த நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்குப் பதிலளிக்க வேண்டிய சட்டபூர்வ பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்றும் வலியுறுத்தினார்.

மேலும், கடந்த காலங்களில் தங்களுக்கு வாக்களிக்காத மக்கள் கூட இன்று தங்களது கொள்கை மீதான நம்பிக்கையினால் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து வருவதாகவும், மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் கிராமங்களுக்கு நேர்மையாகப் பணியாற்றியமையே இதற்குக் காரணம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes