General16 June 2026

இலங்கையில் தீவிரம் அடையும் யானை - மனித மோதல்: புதிய தேசிய செயற்பாட்டுத் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கையில் நீண்டகாலமாக வேகமாக அதிகரித்து வரும் யானை – மனித மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்காக, புதிய தேசிய செயற்பாட்டுத் திட்டமொன்றை வரைவாக்கம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இதற்கான யோசனைக்கே இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட பின்வரும் மாற்றங்கள் காரணமாக காட்டு யானைகளின் வழக்கமான புலம்பெயர் இடைமாறு வழிகளும், அவைகளின் புகலிடங்களும் முற்றாக அழிந்து போயுள்ளன:

சனத்தொகையில் ஏற்பட்ட பெருமளவிலான அதிகரிப்பு, அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஏற்பட்ட விருத்தி மற்றும் காடழிப்பு நடவடிக்கைகள் என்பனவாகும்.

இதன் காரணமாக, இலங்கையின் ஒட்டுமொத்த 25 மாவட்டங்களில் 19 மாவட்டங்களும், 341 பிரதேச செயலகப் பிரிவுகளில் 134 பிரிவுகளும் இந்த யானை – மனித மோதலினால் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட காட்டு யானைகளின் கணிப்பீட்டின்படி, இலங்கையில் 7,450 காட்டு யானைகள் வாழ்ந்து வருவதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது.

இந்த யானை – மனித மோதல்களின் காரணமாக ஆண்டுதோறும் கணிசமான அளவிலான மனித உயிர்களும், காட்டு யானைகளும் உயிரிழப்பதாகப் பதிவாகியுள்ளது. அத்துடன், காட்டு யானைகளின் ஊடுருவலால் வருடாந்தம் ஆயிரக்கணக்கான சொத்துக்களுக்கும் பாரிய சேதங்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன.

யானை – மனித மோதலைக் குறைப்பதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டிலேயே ‘தேசிய செயற்பாட்டுத் திட்டம்’ ஒன்று தயாரிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், தற்போதைய காலகட்டத்தில் நிலவும் யானை – மனித மோதல் நிலைமைகள், 2020 ஆம் ஆண்டின் சூழ்நிலைகளுடன் ஒப்பிடுகையில் பெரிதும் மாற்றமடைந்துள்ளன.

இதனாலேயே, தற்போதைய சூழலுக்குப் பொருத்தமான புதியதொரு தேசிய செயற்பாட்டுத் திட்டத்தை வரைவாக்கம் செய்ய வேண்டியதன் அவசியம் அடையாளம் காணப்பட்டு, அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes