General06 July 2026

அக்குரேகொட சட்டத்தரணி தம்பதி மரணம்: மாலைதீவில் கைதான வாகன ஓட்டுநர் வாக்குமூலம்!

கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி அக்குரேகொட சிறப்பங்காடி ஒன்றுக்கு முன்பாக சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் துப்பாக்கிச் சூட்டில் மரணித்த சம்பவத்தில், துப்பாக்கிதாரிகள் பயணித்த சிற்றூந்தை ஓட்டிய சந்தேகநபர் மாலைதீவிலிருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர் குறித்த குற்றம் தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

குறித்த சந்தேகநபரை 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பெறப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் துப்பாக்கிதாரிகள் தப்பிச் சென்ற சிற்றூந்தை இந்த சந்தேகநபரே ஓட்டிச் சென்றுள்ளார்.

சர்வதேச சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த இவர், பஹ்ரைனிலிருந்து மாலைதீவுக்கு சென்றிருந்தபோது, அந்த நாட்டு குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் இலங்கை புலனாய்வுப் பிரிவினருக்கு அது குறித்து தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, உடனடியாக செயற்பட்ட இலங்கையின் விசேட காவல்துறை குழுவினர் மாலைதீவுக்குச் சென்று சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அவர் மாலே நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வானூர்தி மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் காலி, படபொல, எத்கந்துர பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞராவார்.

கட்டுநாயக்கவிலிருந்து மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, அவர் இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes