General06 July 2026

கோட்டாபயவின் மனுவை உயர் நீதிமன்றுக்கு மாற்றுமாறு சட்டமா அதிபர் கோரிக்கை!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில், தாம் கைது செய்யப்படுவதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுவை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு சட்ட மாஅதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் சுஹர்ஷி ஹேரத் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

மனுதாரரால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் அடிப்படை உரிமைகள் சார்ந்த விடயங்கள் என்பதால், அது குறித்து பரிசீலனை செய்யும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாக, இந்த மனுவை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு அவர் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

இதன்போது, மனுதாரரான கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தனது சமர்ப்பிப்புகளை நிறைவு செய்தார்.

அதற்கமைய, குறித்த வழக்கு மேலதிக சமர்ப்பிப்புகளுக்காக எதிர்வரும் 9ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes