General09 July 2026

மூன்று இலட்சம் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை

இந்த ஆண்டில் மேலதிகமாக 3 இலட்சம் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு, நிர்மாண மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த இலக்கை அடைவதற்காக, 175 பில்லியன் ரூபாய் மதிப்பிலான குடிநீர் வழங்கல் திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தின் ஒரு அங்கமாக, தம்புத்தேகம குடிநீர் வழங்கல் திட்டம் ஜனாதிபதியின் தலைமையில் நாளை (10) மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

32 பில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், தம்புத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 25,000 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கவுள்ளது.

இதேவேளை, கெபித்திகொல்லாவ – ஹொரவபொத்தான குடிநீர் வழங்கல் திட்டத்தின் நிர்மாணப் பணிகளும் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் நிதி உதவியுடன் 52 பில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், 50,000 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes