General15 July 2026

இலங்கையில் 71,000 ஐக் கடந்தது டெங்கு பாதிப்பு: 49 பேர் உயிரிழப்பு

இலங்கையில் இந்த ஆண்டில் நேற்றுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 71,000 ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, நேற்று வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 71,235 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு தொற்று காரணமாக 49 மரணங்களும் சம்பவித்துள்ளன.

நோய்த்தொற்றின் தொடர்ச்சியான பரவலை வெளிப்படுத்தும் வகையில், நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 1,284 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாகாண மட்ட தரவுகள் அடிப்படையில், மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

அங்கு இதுவரை 37,490 பேர் டெங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திற்குள் மாவட்ட ரீதியாக நோக்குகையில், கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கம்பஹாவில் 14,736 பாதிப்புகளும், அதனைத் தொடர்ந்து கொழும்பு மாவட்டத்தில் 14,229 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.

இதேவேளை, நடப்பு ஜூலை மாதத்தின் முதல் 14 நாட்களில் மட்டும் 15,856 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

எனினும், இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் கடந்த ஜூன் மாதத்திலேயே அதிகப்படியான டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

ஜூன் மாதத்தில் மட்டும் 21,538 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes